குர்ஆன் & நபிமொழி

மேலும், எவர்கள் மறுமை நாள் மீது நம்பிக்கை கொள்ளவில்லையோ, அவர்களுக்கு நிச்சயமாக நாம், நோவினை தரும் வேதனையைச் சித்தப்படுத்தி இருக்கின்றோம். (17:10)
Friday, October 15, 2010

கஃபா (முதல் இறையில்லம்) வரலாறு கற்போம்

அகில உலகங்களையும் படைத்த அல்லாஹ், தான் ஒருவன் மட்டும் தான் கடவுள் என்பதற்கு, அவற்றை அத்தாட்சிகளாகவும் ஆக்கினான். இவை இன்றளவும் அல்லாஹ் மட்டும் தான் ஒரே கடவுள் என்பதற்கு ஆதாரமாகத் திகழ்கின்றன. அப்படிப் பட்ட அத்தாட்சிகளில் உள்ளவை தான் அவனுடைய புனிதமிக்க ஆலயமாகிய கஅபாவும் அது அமைந்துள்ள மக்கமா நகரமும் ஆகும். உலக முஸ்லிம்களுக்கு நேர்வழி காட்டுமிடமாகவும், உலக முஸ்லிம்களின் ஒருமைப்பாட்டைப் பறைசாற்றக் கூடியதாகவும் இவ்வத்தாட்சிகள் அமைந்துள்ளன. 'கஅபா' ஆலயத்திற்கும், மக்கமா நகரத்திற்கும் மற்ற ஆலயங்களை விடவும், நகரங்களை விடவும் தனித்த சிறப்புகளும், சட்டங்களும் உள்ளன. அப்படிப்பட்ட சிறப்புகளில் சிலவற்றைக் காண்போம்.


உலக முஸ்லிம்களின் ஒரே கிப்லா
கஅபா' ஆலயம் தான் உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் தொழுகையின் போது முன்னோக்கும் திசையாக அமைந்துள்ளது. இது உலக முஸ்லிம்களின் ஒருமைப்பாட்டிற்கு ஓர் எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றது. ஒரு முஸ்லிம் எங்கிருந்தாலும் அவன் தொழுகையின் போது கஅபாவை முன்னோக்க வேண்டும்.
நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் உமது முகத்தை மஸ்ஜிதுல் ஹராம் திசையில் திருப்புவீராக! எங்கே நீங்கள் இருந்தாலும் உங்கள் முகங்களை அதன் திசையிலேயே திருப்பிக் கொள்ளுங்கள்! அவர்களில் அநீதி இழைத்தோரைத் தவிர (மற்ற) மக்களுக்கு உங்களுக்கு எதிராக எந்தச் சான்றும் இருக்கக் கூடாது என்பதும், எனது அருட்கொடையை உங்களுக்கு நான் முழுமைப் படுத்துவதும், நீங்கள் நேர் வழி பெறுவதுமே இதற்குக் காரணம். (அல்குர்ஆன் 2:150)

முதல் ஆலயம்

மக்கள் அல்லாஹ்வை மட்டும் வணங்குவதற்காக முதலில் கட்டப்பட்ட பள்ளிவாசல் மக்காவிலுள்ள 'கஅபா' ஆலயமாகும்.

அகிலத்தின் நேர்வழிக்கு உரியதாகவும், பாக்கியம் பொருந்தியதாகவும் மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம் பக்கா(எனும் மக்கா)வில் உள்ளதாகும். (அல்குர்ஆன் 3:96)

'கஅபா' ஆலயத்தை முதன் முதலில் கட்டியவர்கள் நபி ஆதம் (அலை) அவர்களாவார்கள். அதைப் புனர் நிர்மாணம் செய்தவர்கள் நபி இப்ராஹீம் (அலை) ஆவார்கள். ஆதம் (அலை) அவர்கள் முதலில் கஅபாவைக் கட்டி, 40 வருடங்களுக்குப் பிறகு பாலஸ்தீனத்தில் உள்ள ''மஸ்ஜிதுல் அக்ஸா''வைக் கட்டினார்கள். இதற்குப் பின்வரும் செய்தி சான்றாக உள்ளது.

நான் நபி (ஸல்) அவர்களிடம் ''பூமியில் முதலில் அமைக்கப்பட்ட பள்ளி எது?'' எனக் கேட்டேன். அதற்கு அவர்கள், 'அல் மஸ்ஜிதுல் ஹராம்' (கஅபா) என்று கூறினார்கள். பிறகு எது? என்றேன். 'அல் மஸ்ஜிதுல் அக்ஸா' என்று கூறினார்கள். ''இந்த இரண்டிற்கும் மத்தியில் எத்தனை (வருடங்கள் இடைவெளி?)'' என்று கேட்டேன். ''நாற்பது வருடங்கள்'' என்று கூறினார்கள்.அபூதர் (ரலி) புகாரி 3366

ஆதம் (அலை) அவர்களால் கட்டப்பட்ட 'கஅபா' நாளடைவில் பாழடைந்து செடி, கொடிகள் சூழப்பட்டதாக மாறியது. இஸ்மாயீல் (அலை) அவர்கள் வாலிபப் பருவத்தை அடையும் பொழுது தான் அல்லாஹ் கஅபாவைப் புணர் நிர்மாணம் செய்யுமாறு கட்டளையிடுகிறான்.

எங்கள் இறைவா! எனது சந்ததிகளை உனது புனித ஆலயத்திற்கருகில், விவசாயத்துக்குத் தகுதி இல்லாத பள்ளத்தாக்கில், இவர்கள் தொழுகையை நிறை வேற்றுவதற்காகக் குடியமர்த்தி விட்டேன். (அல்குர்ஆன் 14:37) என இப்ராஹீம் (அலை) அவர்கள் கூறினார்கள்.

ஹாஜரா, கைக்குழந்தை இஸ்மாயீலையும் பாலைவனத்தில் விட்டு வரும் போது நபி இப்ராஹீம் (அலை) மேற்கண்ட 'துஆ'வை கூறினார்கள் என்பது ஹதீஸின் (புகாரி 3364) மூலம் தெளிவாகிறது.

எனவே சிதிலமடைந்த பள்ளிவாசலைத் தூய்மை செய்யுமாறும், அதன் அடித்தளத்தை உயர்த்துமாறும் அல்லாஹ் கட்டளையிடுகிறான்.

''தவாஃப் செய்வோருக்காகவும், இஃதிகாஃப் இருப்போருக்காகவும், ருகூவு, ஸஜ்தா செய்வோருக்காகவும் இருவரும் எனது ஆலயத்தைத் தூய்மைப்படுத்துங்கள்!'' என்று இப்ராஹீமிடமும், இஸ்மாயீலிடமும் உறுதி மொழி வாங்கினோம். (அல்குர்ஆன் 2:125)

அந்த ஆலயத்தின் அடித் தளத்தை இப்ராஹீமும், இஸ்மாயீலும் உயர்த்திய போது ''எங்கள் இறைவா! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக! நீயே செவியுறுபவன்; அறிந்தவன்'' (என்றனர்.) (அல்குர்ஆன் 2:127)

மக்காவிற்குப் பல பெயர்கள் உள்ளன. அவை:

1. மக்கா, 2. பக்கா, 3. அல் பலதுல் அமீன் (அபயமளிக்கும் ஊர்), 4. உம்முல் குரா (நகரங்களின் தாய்),

நபி (ஸல்) அவர்கள் மக்காவின் மீது அளப்பரிய பற்று வைத்திருந்தார்கள். அங்கேயே வாழ வேண்டும் என எண்ணினார்கள்.

''நபி (ஸல்) அவர்கள் ''ஹஸ்வா'' என்ற ஒட்டகத்தின் மீது நின்றவர்களாக மக்காவை நோக்கி, ''நீ தான் அல்லாஹ்வுடைய பூமியில் சிறந்த ஊராவாய்! அல்லாஹ்வுடைய பூமியில் மிகவும் விருப்பத்திற்குரிய ஊராவாய்! என்னுடைய சமுதாயம் (உன்னை விட்டும்) என்னை வெளியேற்றி இருக்காவிட்டால் நான் வெளியேறி இருக்க மாட்டேன். (ஆனால், அவர்களோ என்னை வெளியேற்றி விட்டார்கள்.)'' என்று கூறினார்கள். அப்துல்லாஹ் பின்அதீ (ரலி) திர்மிதீ 3860

மக்காவை நோக்கி நபி (ஸல்) அவர்கள் கூறிய இச்சொற்கள், அவர்கள் மக்காவின் மீது கொண்டுள்ள அளப்பரிய பற்றை வெளிப்படுத்துகிறது.

அபய பூமி

மக்கமா நகரத்தை அல்லாஹ் அபயமளிக்கக் கூடிய பூமியாக ஆக்கியுள்ளான். அல்லாஹ் கூறுகிறான்:

அபயம் அளிக்கும் புனிதத் தலத்தை அவர்களுக்காக வசிப்பிடமாக நாம் ஆக்க வில்லையா? ஒவ்வொரு கனி வர்க்கமும் நம்மிடமிருந்து உணவாக அதை நோக்கிக் கொண்டு வரப்படுகிறது. எனினும் அவர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள். (அல்குர்ஆன் 28:57)

அதில் நுழைந்தவர் அபயம் பெற்றவராவார். (அல்குர்ஆன் 3:97)

இப்ராஹீம் (அலை) அவர்களின் 'துஆ'வின் காரணத்தால் அல்லாஹ் மக்காவைப் புனித நகரமாக்கினான்.

நபி (ஸல்) கூறினார்கள், ''இப்ராஹீம் (அலை) மக்காவை புனிதமாக்கினார். அதற்காக பிரார்த்தனை செய்தார். இப்ராஹீம் மக்காவைப் புனிதமாக்கியது போல் நான் மதீனாவைப் புனிதமாக்கி உள்ளேன். நபி இப்ராஹீம் (அலை) மக்காவிற்காக பிரார்த்தனை செய்தது போல், நான் மதீனாவிற்கு அதனுடைய ஸாவு (என்ற அளவையிலும்) முத்து (என்ற அளவையிலும் அபிவிருத்தி செய்யுமாறு) பிரார்த்தனை செய்துள்ளேன். அப்துல்லாஹ் இப்னு ஸைத் (ரலி) புகாரி.

இப்ராஹீம் நபி செய்த பிரார்த்தனையை திருக்குர்ஆனில் அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்.

''இறைவா! இவ்வூரைப் பாதுகாப்பு மையமாக ஆக்குவாயாக! இவ்வூராரில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பியோருக்குக் கனிகளை வழங்குவாயாக!'' (அல்குர்ஆன் 2:126)

அல்லாஹ் அவருடைய பிரார்த்தனையை ஏற்று மக்காவைப் பாதுகாப்பு மையமாக ஆக்கினான்.

திருக்குர்ஆன் அபயபூமி என அறிவித்து 14 நூற்றாண்டுகளைக் கடந்த பின்பும், எத்தனையோ ஆட்சி மாற்றங்கள் நடந்த பின்பும் அது இன்றளவும் அபயபூமியாகவே உள்ளது. 14 நூற்றாண்டுகளாக எந்தத் தாக்குதலுக்கும் உள்ளாகாத வரலாற்று சிறப்பு மிக்க ஆலயமாகவும் இது இருந்து வருகிறது. குர்ஆன் இறைவனின் வார்த்தைகள் தான் என்பதற்கு இது மிகப் பெரும் சான்றாக அமைந்துள்ளது.

மேலும் உலகத்தில் விளைகின்ற அனைத்து கனி வர்க்கங்களும் மக்காவில் தாராளமாக வந்து குவிந்து கொண்டிருப்பதும், இது இறைவனின் வார்த்தைகள் என்பதற்குச் சான்றாகத் திகழ்கிறது.

அல்லாஹ்வுடைய பாதுகாப்பு

'கஅபா' ஆலயத்திற்கு அல்லாஹ் தன்னுடைய நேரடிப் பாதுகாப்பை வழங்கியுள்ளான். கியாமத் நாள் வரை அதை எந்தப் படையாலும் அழித்து விட முடியாது. பின்வரும் வரலாற்றுச் சம்பவம் அதற்குச் சிறந்த சான்றாகும்.

அப்ரஹா எனும் மன்னன் தன்னுடைய யானைப் படையுடன் கஅபாவைத் தகர்ப்பதற்காக வந்தான். அவனை எதிர்த்துப் போராடக் கூடிய எந்தப் படையும் அப்போது மக்காவில் இல்லை. என்றாலும், அல்லாஹ் ஒரு வகையான பறவைகளை அனுப்பி, அந்த யானைப் படையை அழித்து தன்னுடைய ஆலயத்தைப் பாதுகாத்தான். இதைப் பற்றி அல்லாஹ் கூறுகிறான்:

''(முஹம்மதே!) யானைப் படையை உமது இறைவன் எப்படி ஆக்கினான் என்பதை நீர் அறியவில்லையா? அவர்களின் சூழ்ச்சியை அவன் தோல்வியில் முடிக்கவில்லையா? அவர்களிடம் பறவைகளைக் கூட்டம், கூட்டமாக அனுப்பினான். சூடேற்றப்பட்ட கற்களை அவர்கள் மீது அவை வீசின. உடனே அவர்களை மெல்லப்பட்ட வைக்கோல் போல் ஆக்கினான். (அல்குர்ஆன் 105:1-5)

மேலும் கியாமத் நாள் நெருங்கும் போது ஒரு படை 'கஅபா'வை இடிப்பதற்காகப் படையெடுத்து வருவார்கள். அல்லாஹ் அவர்களையும் அழித்து கஅபாவைப் பாதுகாப்பான் என்ற செய்தியை பின்வரும் நபிமொழி மூலம் அறிந்து கொள்ளலாம்.

''ஒரு படையினர் கஅபாவின் மீது படையெடுப்பார்கள். வெட்ட வெளியான ஒரு பூமியில் அவர்கள் இருக்கும் போது அவர்களில் முதலாமவர் முதல் கடைசி நபர் வரை உயிருடன் பூமிக்குள் புதையுண்டு போவார்கள்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ''அல்லாஹ்வின் தூதரே! அவர்களில் முதலாம் நபர் முதல் கடைசி நபர் வரை எவ்வாறு புதையுண்டு போவார்கள்? அங்கு அவர்களைச் சேராதவர்களும் இருப்பார்கள். கடைவீதிகளும் இருக்குமே!'' எனக் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ''முதலாமவர் முதல் கடைசி நபர் வரை புதையுண்டு போகத் தான் செய்வார்கள். எனினும் அதற்குப் பிறகு அவரவரது எண்ணத்திற்கேற்ப எழுப்பப் படுவார்கள்'' என்று கூறினார்கள். ஆயிஷா (ரலி) நூல்: புகாரி 2118

இறைவன் 'கஅபா' ஆலயத்திற்கு தன்னுடைய நேரடிப் பாதுகாப்பை வழங்கியிருப்பது அதனுடைய சிறப்பைக் காட்டுகிறது.

கொலை, போர் செய்தல் கூடாது

நகரங்களின் தாயான மக்காவிற்கு இறைவன் வழங்கியுள்ள சிறப்பு அம்சங்களில் சில:

அங்கு கொலை செய்வதோ, போர் புரிவதோ கூடாது. மேலும் அங்குள்ள வேட்டைப் பிராணிகளை விரட்டுவதும், மரங்களை வெட்டுவதும், செடி, கொடிகளைப் பறிப்பதும் கூடாது.

''அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது (மக்களிடையே) எழுந்து நின்று, ''அல்லாஹ் வானங்களையும், பூமியையும் படைத்த போதே மக்காவை புனிதப்படுத்தி விட்டான். ஆகவே, அது அல்லாஹ் புண்ணியப்படுத்திய காரணத்தால் இறுதி நாள் வரை புனிதமானதாகும். எனக்கு முன்பும் எவருக்கும் இங்கு போர் புரிவது அனுமதிக்கப் படவில்லை. எனக்குக் கூட சிறிது நேரம் மட்டுமே இங்கு போர் புரிய அனுமதிக்கப்பட்டது. இங்குள்ள வேட்டைப் பிராணிகளை விரட்டக் கூடாது, இங்குள்ள மரங்களை வெட்டக் கூடாது. இங்குள்ள புற்பூண்டுகளைக் கிள்ளக் கூடாது. பிறர் தவற விட்ட பொருளை அதை அறிவிப்பவர் தவிர வேறெவரும் எடுக்கக் கூடாது'' என்று சொன்னார்கள். உடனே அப்பாஸ் பின் அப்துல் முத்தலிப் (ரலி) அவர்கள் ''அல்லாஹ்வின் தூதரே! 'இத்கிர்' எனும் புல்லைத் தவிரவா? ஏனெனில், அது உலோகத் தொழிலாளர்களுக்கும், வீடுகளுக்கும் தேவைப்படுகின்றதே'' என்று கேட்க நபி (ஸல்) அவர்கள் (சிறிது நேரம்) மௌனமாயிருந்து விட்டு பிறகு ''இத்கிரைத் தவிர தான். ஏனெனில் அதை வெட்டிப் பயன்படுத்துவது அனுமதிக்கப்பட்டதாகும்'' என்று பதிலளித்தார்கள். இப்னு அப்பாஸ் (ரலி) புகாரி 4313, 1834

புனிதமிக்க மக்கா நகரில் பாவமான காரியங்களைச் செய்வோருக்குக் கடுமையான வேதனை உள்ளது என அல்லாஹ் எச்சரித்தான்.

Sunday, September 5, 2010

குர்ஆன் ஓதுவதின் சிறப்புகள்



குர்ஆன் என்பதின் விளக்கம்:

அகில உலகத்தையும் படைத்து பரிபாளித்து கொண்டிருக்கும் இறைவனால் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒவ்வொரு நபிமார்கள் மூலமாக ஒவ்வொரு வேதங்கள் அருளப்பட்டன, ஆனால் அந்த சமுகத்தினர் அதை சரிவர பயன்படுத்தாமல் அதை ஒரு பொருட்டாக கூட மதிக்காமல் விட்டுவிட்டார்கள். மேலும் அது காலப் போக்கில் அழிந்தும் விட்டன. இறுதியாக, இறுதி நபியான கன்மனி நாயகம் ரஸூல் (ஸல்) அவர்கள் மூலம் முஸ்லிம் மட்டுமல்லாது அனைத்து மத மக்களுக்கும் ஏற்ற முறையில் ஒரு வேதத்தை இறக்கிய்ருளினான் அதுவே இறுதி வேதமான அல்குர்ஆன் ஆகும். இது இறுதி நாள்வரை எந்த ஒரு மாற்றமும் இல்லாமல், எப்படி அருளப்பட்டதோ! அதன் உள்ளடக்கம் சிறிதும் மாற்றமில்லாமல் பாதுகாக்கப்படும் என இறைவன் தன் திருமறையிலேயே! வாக்களித்துள்ளான். இதை யாராலும் எந்த ஒரு கருத்தையும் உட்திணிக்கவும் முடியாது, அதுபோல அதிலிருந்து எந்த ஒரு வரியையும் அழிக்கவும் முடியாது, ஏனென்றால் குர்ஆன் பல்லாண்டு காலமாக பல நபர்களின் மனதில் பதிந்தும் கிடக்கின்றது.

நிச்சயமாக நாம் தான் (நினைவூட்டும்) இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம்; நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம். (15:9)

எந்த ஒரு வேதத்திற்கும் கிடைக்காத தனிசிறப்பு, குர்ஆன் அனைத்து மக்களாலும் படித்து அதன் படி செயல்பட வேண்டும் என்பதற்காகவே அனைத்து மொழிகளிலும், மொழிப்பெயர்க்கப்பட்டு இருப்பதுவே! யாரும் மறுமை நாளில் இறைவனே உன் வேதம் என்னுடைய மொழியில் இல்லை என்று வாதிட முடியாதப்படி எல்லாம் வல்ல இறைவன் அதை அருளியுள்ளான். ஆகவே "காற்றுள்ள போதே தூற்றிக்கொள்" என்ற பழமொழிக்கொப்ப நாம் வாழ்கின்ற காலத்திலேயே அவற்றை படித்து ஆராய்ந்து பயன்ப் பெற வேண்டும்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த திருமறையை ஓதுவதின் சிறப்பு குறித்து திருமறையும், நபியவர்களின் பொன் மொழிகளும் அதிகமதிகம் வலியுறுத்திக் கூறுகின்றன. அல்லாஹ் திருமறையில் குறிப்பிடுகின்றான்:

எவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை ஓதுகின்றார்களோ, மேலும் தொழுகையை நிலைநாட்டுகின்றார்களோ, நாம் வழங்கியவற்றிலிருந்து மறைமுகமாகவும், வெளிப்படையாகவும் கொடுக்கின்றார்களோ அவர்கள் திண்ணமாக என்றைக்கும் அழியாத ஒரு வியாபாரத்தையே ஆதரவு வைக்கிறார்கள். அவர்களுக்குரிய நற்கூலியை அவன் முழுமையாகக் கொடுப்பான். இன்னும் தன் அருளிலிருந்தும் அவர்களுக்கு மிகுதப் படுத்துவான். நிச்சயமாக அவன் மிக மன்னிப்பவனும் நன்றியை ஏற்றுக் கொள்ளுபவனுமாவான். (35 : 29-30)

உஸ்மான் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: தாமும் குர்ஆனைக் கற்று, பிறருக்கும் அதனைக் கற்றுக் கொடுப்பவர்தாம் உங்களில் சிறந்தவராவார்|என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஒருவருக்கு அல்லாஹ் திருக்குர்ஆனைக் (கற்றுக்) கொடுத் தான். அதன் மூலம் அவர் இரவு-பகலில் நின்று வணங்கினார். இன்னொருவருக்கு அல்லாஹ் பொருளாதா ரத்தை வழங்கினான். அதன் மூலம் அவர் இரவு-பகலில் நல்ல வழியில் செலவு செய்கிறார். இந்த இருவர் விஷயத்திலன்றி பொறாமை கொள்ளுதல் என்பது இல்லை| (புகாரி, முஸ்லிம்).

மேலும் அபூ உமாமா (ரலி) வர்கள் அறிவிக்கின்றார்கள்: குர்ஆனை ஓதுங்கள். திண்ணமாக தன்னை ஓதக் கூடியவர்களுக்கு மறுமை நாளில் அது பரிந்துரை செய்யக் கூடியதாக வரும். (முஸ்லி;ம்)

நபியவர்கள் கூறினார்கள்: குர்ஆனை திறமையாகக் கற்றுத்தேர்ந்தவர், நல்ல கண்ணியமிக்க எழுத்தர் (மலக்கு) களுடன் இருப்பார். எவர் குர்ஆனை திக்கித் திக்கி ஓதுகின்றாரோ, மேலும் அவருக்கு அது கடினமாகவும் இருக்கின்றதோ அவருக்கு இரட்டைக் கூலி உண்டு| (புகாரி, முஸ்லிம்).


ஒரு கூலி ஓதியதற்காக. மற்றொன்று சிரமத்துடன் அதை ஓதியதற்காக. அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
எவர் குர்ஆனிலிருந்து ஒரே ஒரு எழுத்தை ஓதுகின்றாரோ அதற்காக அவருக்கு ஒரு நன்மை கிடைக்கின்றது. அந்த ஒரு நன்மை அதைப் போன்று பத்து நன்மைகளாக அதிகரிக்கப்படுகின்றது. அலிஃப்-லாம்-மீம் என்பதை நான் ஒரு எழுத்து என்று சொல்ல மாட்டேன். ஆனால் அலிஃப் ஒரு எழுத்து. லாம் ஒரு எழுத்து. மீம் ஒரு எழுத்து|. (திர்மிதி)


திருக் குர்ஆன் ஓதுவதின் ஒழுங்கு முறைகள்:

அல்லாஹ்வுக்காக ஓதுகிறோம் என்ற தூய எண்ணத்துடன் ஓத வேண்டும். அல்லாஹ் கூறுகின்றான்: உங்க ளது கீழ்ப்படிதலை அல்லாஹ்வுக்கே உரித்தாக்கிய வண்ணம் அவனை அழையுங்கள். (40 : 14)

கவனத்துடனும் மனஓர்மையுடனும் ஓத வேண்டும். ஏனெனில் குர்ஆன் அல்லாஹ்வின் வாக்காகும். சுத்தமான நிலையில் அதனை ஓத வேண்டும். இது அல்லாஹ்வின் வேதத்திற்கு நாம் அளிக்கும் கண்ணியமாகும். எனவே பெருந்துடக்கு போன்றவற்றிலிருந்து சுத்தமான நிலையில்தான் அதனை ஓதவேண்டும். அறுவறுப்பான இடங்களில் குர்ஆனை ஓதலாகாது. ஏனெனில் இது போன்ற இடங்களில் திருமறையை ஓதுவது கண்ணியக் குறைவானதாகும். மேலும் மல-ஜலம் கழிப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடங்களிலும் குர்ஆனை ஓதுதல் கூடாது. கண்ணியமிக்க குர்ஆனுக்கு இத்தகைய இடங்கள் ஒருபோதும் உகந்தவையல்ல.

திருக்குர்ஆனை ஓதுவதற்கு முன்பாக சபிக்கப்பட்ட ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடிக் கொள்ள வேண்டும். அல்லாஹ் கூறியுள்ளான்:

நீர் குர்ஆனை ஓதத் தொடங்குவீராயின் சபிக்கப்பட்ட ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருவீராக!. (16 : 98)

குர்ஆனை அழகான முறையில் ராகமிட்டு ஓத வேண்டும். ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபியவர்கள் மஃரிப் தொழுகையில் அத்தூர் அத்தியாயத்தை ஓதிடக் கேட்டேன். நபியவர்களை விட அழகிய குரலுடைய ஒருவரை அல்லது அழகாக ஓதுபவரை நான் கேட்டதில்லை|. (புகாரி, முஸ்லிம்)


தொழுபவர், தூங்குபவர் போன்றோருக்குத் தொல்லை தரும் வண்ணம் குரலுயர்த்தி ஓதலாகாது.

ஒருமுறை நபி (ஸல்) அவர்கள் வெளியே வந்தார்கள். அங்கே மக்கள் குர்ஆனை சப்தமிட்டு ஓதிக் கொண்டிருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொழுபவர் தன் இறைவனுடன் மெதுவாக உரையாடுகிறார். எனவே எதைக்கொண்டு அவனுடன் உரையாடுகிறார் என்பதைக் கவனித்துக் கொள்ளட்டும். மேலும் உங்களில் ஒருவர் மற்றவருக்கு இடைஞ்சல் ஏற்படுத்தும் முறையில் குர்ஆனை சப்தமிட்டு ஓத வேண்டாம்|

குர்ஆனை ஓதும்போது நிறுத்தி, நிதானமாக ஓத வேண்டும். அல்லாஹ் திருமறையில் கூறுகின்றான்:
மேலும் குர்ஆனை நிறுத்தி நிதானமாக ஓதுவீராக! (73 : 3).

அத்தோடு திருக்குர்ஆனை ஓதுபவர் ஸஜ்தா வசனத்தைக் கடந்து சென்றால் ஸுஜூது செய்தல் வேண்டும்.

யா அல்லாஹ்! உனது வேதத்தை உனக்கு திருப்தியளிக்கின்ற வகையில் ஓதுகின்ற பாக்கியத்தைத் தந்தருள்வாயாக! மேலும் குர்ஆனை எங்களுக்குப் பாதகமாக அன்றி சாதகமாக ஆக்கி குர்ஆனை ஓதுவதன் மூலம் எங்களின் நன்மைகளை அதிகரித்து அந்தஸ்தை உயர்த்துவாயாக!

குர்ஆன் ஓதுவதின் சிறப்புகள்:

1) நீங்கள் குர்ஆனை ஓதுங்கள். நிச்சயமாக அது நாளை மறுமையில் அதை ஓதியவருக்கு ''பரிந்துரை" செய்யும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

2) குர்ஆனை ஓதி அதன்படி அமல் செய்தவரையும் குர்ஆனையும் நாளை மறுமையில் கொண்டு வரப்படும். குர்ஆனின் இரண்டு சூராக்கள் அல்பகரா, ஆல இம்ரான் முன் வந்து அந்த இரண்டையும் ஓதியவருக்காக அல்லாஹ்விடத்தில் வாதாடும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

3) உங்களில் சிறந்தவர்கள் குர்ஆனைக் கற்று அதை மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுத்தவர் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

4) குர்ஆனை உரிய முறையில் ஓதி அதன் படி செயல்பட்டவர் நாளை மறுமையில் சங்கையான உயர்ந்த மலக்குகளுடன் இருப்பார். கஷ்டப்பட்டு திக்கித் திக்கி ஓதுபவருக்கு இரண்டு மடங்கு கூலி கிடைக்கும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

5) அல்லாஹ்வுடைய வேதத்திலிருந்து (குர்ஆனிலிருந்து) யார் ஒரு எழுத்தை ஓதுகின்றாரோ அவருக்கு ஒரு நன்மை கிடைக்கும். ஒரு நன்மை செய்தால் அதை பத்து மடங்காக்கப்படும். அலிஃப், லாம், மீம் என்பது ஒரு எழுத்து என்று நான் சொல்ல மாட்டேன். அலிஃப் என்பது ஒரு எழுத்தாகும். லாம் என்பது ஒரு எழுத்தாகும், மீம் என்பது ஒரு எழுத்தாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: திர்மிதீ

6) "எவருடைய உள்ளத்தில் குர்ஆனில் கொஞ்சம் கூட மனனம் இல்லையோ அவருடைய உள்ளம் பாழடைந்த வீட்டைப்போல்" என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதீ)

விளக்கம்: குர்ஆனை அல்லாஹ் நமக்கு அருளிய நோக்கம் நாம் அதைப் படித்து, சிந்தித்துச் செயல்பட வேண்டும் என்பதற்குத்தான். ஆனால் முதிய வயதை அடைந்தும் குர்ஆனை ஓதத் தெரியாதவர்கள் நம்மில் பலர் உள்ளனர். இது கவலை தரக்கூடிய ஒன்றாகும். முதிய வயதாகிவிட்டாலும் குர்ஆனைக் கற்றுக் கொள்ள முடியும். உங்களை மரணம் வந்தடைவதற்கு முன் குர்ஆனை ஓதத் தெரிந்தவர்களிடம் சென்று குர்ஆனை ஓதத் தெரிந்து கொள்ளுங்கள். புதிதாக இஸ்லாத்தை ஏற்ற பல சகோதரர்கள் குர்ஆனை சரளமாக ஓதவும் அதன்படி செயல்படவும் செய்கின்றார்கள். நாமோ பரம்பரை முஸ்லிம் என்று சொல்லிக்கொண்டு நமது வழிகாட்டியாகிய குர்ஆனைப் பற்றி எதுவும் தெரியாதவர்களாக இருக்கின்றோம். முஸ்லிம்களே! தயவு செய்து குர்ஆனைப் படியுங்கள் அதைப்படிப்பது மிகவும் இலகுவானது.

وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِنْ مُدَّكِرٍ

திட்டமாக, நாம் குர்ஆனை உபதேசம் பெறுவதற்காக எளிதாக்கி இருக்கின்றோம். ஆகவே, (இதனைக் கொண்டு) படிப்பினை பெறக்கூடியவர் உண்டா? (அல்குர்ஆன் 54:22)

أَفَلَا يَتَدَبَّرُونَ الْقُرْآنَ أَمْ عَلَى قُلُوبٍ أَقْفَالُهَا

மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இதயங்களின் மீது பூட்டுக்கள் போடப்பட்டு விட்டனவா? (அல்குர்ஆன் 47:24)

நாம் இந்தக் குர்ஆனைப் படித்து, விளங்கி, அதன்படி செயல்பட வேண்டும் என்று அல்லாஹ் கூறுகின்றான். அப்படிச் செயல்படாதவர்களின் உள்ளங்கள் மீது பூட்டுக்கள் போடப்பட்டு விட்டனவா? என்று கேட்கின்றான். அப்படி அவர்களின் உள்ளங்கள் மீது பூட்டுக்கள் போடப்படவில்லையே! ஏன் அதைப்படித்து செயல்படாமல் இருக்கின்றார்கள்? என அல்லாஹ் நம்மை நோக்கி சிந்தனையைத் தூண்டும் கேள்வியை கேட்கின்றான். ஆகவே அன்புள்ள சகோதர சகோதரிகளே! குர்ஆனை அதிகமதிகம் ஓதுங்கள். அதன் கருத்துக்களை தர்ஜுமதுல் குர்ஆனில் விளங்கிப்படியுங்கள். அதன் படி செயல்படுங்கள். விஷேசமாக குர்ஆன் இறங்கிய இந்த ரமளான் மாதத்தில் அதிகமாக ஓதுங்கள். ஒரு எழுத்தை ஓதினால் குறைந்தது பத்து நன்மை கிடைக்கின்றது. ஒரு நாளைக்கு எத்தனை எழுத்துக்கள் படிக்க நமக்கு வாய்ப்பிருக்கிறது. அதன் நன்மைகளை நம்மால் கணக்கிட முடியுமா? சந்தர்ப்பத்தைத் தவற விடாதீர்கள்.

குர்ஆன் ஓதுவது என்பது இரண்டு வகைப்படும் : திலாவா ஹக்மிய்யா, திலாவா லஃப்ளிய்யா.

திலாவா ஹக்மிய்யா என்றால், குர்ஆனின் செய்திகள் உண்மையென ஏற்பதும் அதன் சட்டங்களை அமுல்படுத்துவதுமாகும். அதன் ஏவல்களைச் செய்வதன் மூலமும், அதன் விலக்கல்களை விட்டு விலகுவதன் மூலமும் அதனைப் பின்பற்றுதலைக் குறிக்கும்.

திலாவா லஃப்ளிய்யா என்றால், கிராஅதுல் குர்ஆன் என்கிற ஓதுதலாகும். இதன் சிறப்பு குறித்து, ஏராளமாக குர்ஆனின் வசனங்களும், நபிமொழிகளும் உள்ளன. குர்ஆன் முழுவதையும் ஓதுவதன் சிறப்பு குறித்தும், குறிப்பிட்ட அத்தியாயங்களை ஓதுவதன் சிறப்பு குறித்தும் அவை பேசுகின்றன.

எந்த ஒரு குழுவினர் அல்லாஹ்வுடைய பள்ளிவாசலில் ஒன்று கூடி குர்ஆனை ஓதுகிறார்களோ மேலும் தங்களுக்கிடையே அதனை ஆய்வு செய்கிறார்களோ அவர்கள் மீது நிச்சயம் அமைதி இறங்குகிறது. அவர்களைக் கருணை சூழ்கிறது. மேலும் அவர்களை மலக்குகள் வளைந்து கொள்கிறார்கள். அல்லாஹ் அவர்களைப் பற்றி தன்னிடம் உள்ளவர்களிடம் எடுத்துரைக்கின்றான்.

உங்களில் எவரும் இந்த ஆயத் - வசனத்தை நான் மறந்து விட்டேன் என்று சொல்ல வேண்டாம். உண்மையில் அவர் தான் மறக்கடிக்கப்பட்டார்

நான் மறந்து விட்டேன் என்பதன் காரணம், குர்ஆனில் அவர் மனனம் செய்திருந்தவை குறித்து அவர் பொடுபோக்காக இருந்து விட்டார். அதை மறந்து விடும் அளவுக்கு அவர் அலட்சியத்துடன் இருந்திருக்கின்றார் என்பதையும் காட்டுகின்றது. அதாவது குர்ஆனுக்கும் அவருக்கும் தொடர்பின்மையைக் காட்டுகின்றது.

நிச்சயமாக இந்தக் குர்ஆன் அல்லாஹ்வின் விருந்துபச்சாரமாகும். அவனது விருந்துபச்சாரத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். திண்ணமாக இந்தக் குர்ஆன் அல்லாஹ்வின் உறுதியான கயிறு, தெளிவான ஒளி, பயனுள்ள நிவாவரணியாகும். இந்தக் குர்ஆனை யார் பற்றிப் பிடித்து நிற்கிறாரோ அவருக்குப் பாதுகாப்பாகவும், அதைப் பின்பற்றி வாழ்பவர்களுக்கு ஈடேற்றமாகவும் திகழ்கிறது. அதை ஓதுவதன் மூலம் ஒன்றுக்கு பத்து நன்மை என இறைவன் கூலி வழங்குவான். அல்லாஹ்விடம் கூலியையும் அவனது உவப்பையும் எதிர்பார்த்து யார் ஓதினாலும் அவர்களின் கூலி குறையாது. குறைவான அமல்களுக்கு ஏராளமான கூலிகள். நிவர்த்தி செய்ய முடியாத அந்த மறுமை நாளில் லாபம் ஈட்டத் தவறியவன் யாரோ அவன் தான் நஷ்டம் அடைந்தவன்.

பகல்-இரவு எல்லா நேரங்களிலும் எந்த அமல்கள் இறைவனோடு உங்களுக்கு நெருக்கத்தை ஏற்படுத்துமோ அந்த அமல்களைச் செய்வதைப் பெரும் பாக்கியமாகக் கருதுங்கள். ஆயுட்காலம் வேகமாகச் சுருட்டப்படுகின்றது. காலங்கள் அனைத்தும் எவ்வாறு கழிந்து செல்கிறதெனில் பகலின் சில மணி நேரங்கள் கழிந்தது போன்றே தோன்றுகின்றது.

யா அல்லாஹ்! உனது வேதத்தை உனக்குத் திருப்தி அளிக்கும் வகையில் ஓதுகின்ற பாக்கியத்தை எங்களுக்குத் தந்தருள்வாயாக! அதன் மூலம் எங்களை ஈடேற்றப் பாதையில் செலுத்துவாயாக! இருள்களிலிருந்து எங்களை வெளியேற்றி வெளிச்சத்திற்குக் கொண்டு வருவாயாக! மேலும் குர்ஆனை எங்களுக்குப் பாதகமாக அன்றி சாதகமாக ஆக்குவாயாக! அகிலம் முழுவதையும் படைத்துப் பரிபாலிக்கும் இரட்சகனே!

யா அல்லாஹ்! இந்தக் குர்ஆன் மூலம் எங்களது அந்தஸ்தை உயர்த்துவாயாக! மேலும் இதன் மூலம் எங்களை விட்டும் தீமைகளைப் போக்குவாயாக! உனது கருணையினால் எங்களுக்கும் எல்லா முஸ்லிம்களுக்கும், கருணையாளர்களில் எல்லாம் கருணையாளனே! பாவமன்னிப்பும் வழங்குவாயாக!

யா அல்லாஹ்! எங்களுடைய நோன்புகளைப் பாதுகாப்பாயாக! எங்களுக்குப் பரிந்துரை செய்யக் கூடியதாக அவற்றை ஆக்கியருள்வாயாக! மேலும் எங்கள் பாவங்களையும், எங்கள் பெற்றோர் பாவங்களையும் அனைத்து முஸ்லிம்களின் பாவங்களையும் மன்னித்தருள்வாயாக!

குர்ஆனைப் படித்து அதன்படி நடந்து ஈருலக வெற்றி பெற அல்லாஹ் நம் அனைவருக்கும் வாய்ப்பளிப்பானாக! ஆமீன்!!
Friday, August 20, 2010

இறையச்சம்

எல்லா மதங்களும் மனிதனுக்கு இறையச்சம் வேண்டும் என்று கூறுகின்றன. ஆனால் இஸ்லாம் அதையெல்லாம் தாண்டி, ஒரு மனிதன் மனிதனாக வாழ வேண்டும் என்றால் இறை பக்தி இறையச்சம் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று கூறுகின்றது.

உலகில் பல மாதிரியான தவறுகள் நடந்தவன்னம் தான் இருக்கின்றது, அதை தடுப்பதற்கு பல சட்டங்கள் இருந்தும் அவற்றால் சரிவர செயல் பட முடியவில்லை என்பதே தெரிகிறது. இன்று உலகில் நடக்கின்ற எத்தனையோ கொடுமைகள் நிகழக் காரணம் என்ன? பலரிடம் இறையச்சம் இல்லாமையே காரணமாக இருக்கின்றது.

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், பாலியல் பலாத்காரங்கள், ஈவ்டீசிங், கொலை, கொள்ளை, கற்பழிப்பு, திருட்டு, விபச்சாரம், லஞ்சம், மனித உமை மீறல்கள் இது போன்ற குற்றங்களைத் தடுக்க வகைவகையான சட்டங்கள் இருந்தும் மனிதனைத் தவறிலிருந்து மீல வைக்க முடியவில்லை. அது ஒருகாலும் நம் சட்டத்தால் முடியாது.

அப்படியெனில் உலகில் மலிந்து கிடக்கின்ற குற்றங்களைக் களையெடுக்க, வேரோடு அழிக்க முடியவே முடியாதா? இத்தீமைகள் ஒவ்வொரு நாளும் நடந்தேறிக் கொண்டு தான் இருக்க வேண்டுமா? இதற்கு ஏற்ற தீர்வு தான் என்ன? என்ற கேள்வி நமக்குள் தோன்றலாம், இதை அழகாகவும் தெளிவாகவும் இஸ்லாம் எடுத்துரைக்கின்றது.

இஸ்லாம் கூறுகின்றது, எவ்வளவு கொடிய தவறாக இருந்தாலும் அதை எளிய முறையில் தடுக்க முடியும் மனித சட்டங்களால் அல்ல! நம் மனதில் மறைந்து கிடக்கும் இறையச்சத்தால் மட்டுமே!

இப்பொழுது நடக்கின்ற கொடுமைகளை விட, பல்லாண்டு காலமாக பல கொடுமைகளைச் செய்தவர்கள் தாம் அரபியர்கள். அவர்களுக்கு வட்டி, மது, மாது, சூது இவைகள் அனைத்தும் அத்துப்படி. அவர்களிடமிருந்து தான் இங்குள்ளவர்கள் இந்தத் தீமைகளைப் படித்திருக்க வேண்டும். இப்படிப் பட்டவர்களிடம் சில காலத்தில் மாபெரும் மாற்றத்தைக் கொண்டு வந்தது எது? இறையச்சம் தான்.

நபி (ஸல்) அவர்கள் நடந்து செல்கின்றார்கள். ஒரு பேரீத்தம்பழம் கீழே கிடக்கின்றது. அதைப் பார்த்த நபியவர்கள், ''இது ஸதகா தர்மப் பொருளாக இல்லாமலிருந்தால் இதை நான் சாப்பிட்டிருப்பேன்'' என்று கூறினார்கள்.அறிவிப்பவர்: (நூல்: புகாரி)

ஸதகா பொருள் நபியவர்களுக்குத் தடை செய்யப்பட்டிருந்தது. எனவே தான் தெருவில் கிடந்த பொருளைப் பார்த்த மாத்திரத்தில் அதைச் சாப்பிடாமல் விடுகின்றார்கள். காரணம் இது தடை செய்யப்பட்ட பொருளாக இருக்குமோ? இதனால் இறைவன் நம்மைத் தண்டித்து விடுவானோ? என்று அஞ்சி இவ்வாறு செய்கின்றார்கள்.

பொதுச் சொத்துக்களை எப்படியாவது அபகரித்து விட வேண்டும் என்று இன்று பல நபர்கள் தங்களின் தலையை பிய்த்துக் கொண்டு இருக்கின்றார்கள். ஆனால் அண்ணல் நபியவர்கள் பொதுச் சொத்து தம்மிடம் இருந்து விடக் கூடாது; அது பொது மக்களுக்கு முழுமையாகச் சென்றடைய வேண்டும் என்பதில் முழுக் கவனம் செலுத்தினார்கள்.

''நபி (ஸல்) அவர்களுடன் ஒரு நாள் அஸர் தொழுதேன். அவர்கள் தொழுகை முடிந்தவுடன் மிக வேகமாக மனைவியின் வீட்டுக்குச் சென்றார்கள். நபியவர்களின் விரைவைப் பார்த்த மக்கள் அதிர்ச்சியுற்றனர். மீண்டும் நபியவர்கள் பள்ளிக்கு வந்து மிக விரைவாகச் சென்றதன் காரணத்தை மக்களுக்குக் கூறினார்கள். ''என்னிடத்தில் (பொது மக்களுக்குச் சேர வேண்டிய) சில பேரீத்தம் பழங்கள் இருந்தன. அது என்னிடம் இருப்பதை நான் விரும்பவில்லை. எனவே அதைப் பங்கிட்டுக் கொடுப்பதற்காகத் தான் நான் சென்றேன்'' என்று கூறினார்கள். (நூல்: புகாரி)

இப்படிப்பட்ட தூயவர்களிடத்தில் படித்த நபித்தோழர்கள் எப்படித் தங்கள் வாழ்க்கையில் இறையச்சத்தைக் கடைப்பிடிக்கின்றார்கள் என்று பார்ப்போம்.

நான் என் அடிமையை சாட்டையால் கடுமையாக அடித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது எனக்குப் பின்னாலிருந்து ''அபூ மஸ்வூதே!'' என்ற சப்தம் வந்தது. இருப்பினும் என் கோபத்தினால் அந்த சப்தத்தை நான் விளங்கவில்லை. என்னை அவர் நெருங்கி விடுகின்றார். நான் பார்த்தால் அது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள். அப்பொழுது நபியவர்கள், ''அபூ மஸ்வூதே! தெந்து கொள்ளுங்கள்! அபூ மஸ்வூதே! தெந்து கொள்ளுங்கள்!'' என்றார்கள். என் கையில் இருந்த சாட்டை கீழே விழுந்து விடுகின்றது. மீண்டும் நபியவர்கள், ''இந்த அடிமையை அடிப்பதற்கு எந்த அளவுக்கு உம்மால் முடியுமோ அதை விட அல்லாஹ்வால் உம்மைத் தண்டிப்பதற்கு முடியும்'' என்று கூறினார்கள். இதற்குப் பிறகு ஒரு காலத்திலும் நான் என் அடிமையை அடிக்கவில்லை. (நூல்: முஸ்லிம்)

மனித நேயம் என்றால் என்ன என்று கூடத் தெரியாத மோசமான வாழ்க்கை வாழ்ந்த நபித்தோழர்களின் அடிப்படை குணத்தையே மாற்றி விடுகின்றது. அடிமைகளை, விலங்குகளை விட மட்டமாக நடத்தியவர்களை அவர்களும் மனிதர்கள் தாம்; அவர்களுக்கு ஒரு சிறு தீங்கும் ஏற்படுத்தக் கூடாது என்று செயல்பட வைத்தது இந்த இறையச்சம் தான்.

எல்லா தீமைகளுக்கும் முன்னோடிகள் என்று பெயர் எடுத்தவர்கள் கொஞ்ச காலத்திலேயே இறைவனால் பாராட்டப்பட்டனர் என்றால் அதற்குக் காரணம் இறையச்சம் தான். அது தான் மனித உருவில் மிருகங்களாக வாழ்ந்தவர்களை புனிதர்களாக மாற்றியது. இன்னும் அந்த அரபு நபித்தோழர்களின் பெயர்களை நாம் சொல்லும் போது நாமும் சேர்ந்து அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்கின்றோம்.

எல்லா செயல்பாடுகளுக்கும் அடிப்படையாக இறையச்சம் இருக்க வேண்டும். அது இல்லை என்றால் எவ்வளவு பெரிய நன்மையை ஒருவன் செய்தாலும் அதை இறைவன் நிராகத்து விடுவான் என்கின்றது இஸ்லாம்.

(குர்பானியின்) மாமிசங்களோ, அவற்றின் இரத்தங்களோ அல்லாஹ்வை அடைவதில்லை. மாறாக உங்களிடமுள்ள (இறை) அச்சமே அவனைச் சென்றடையும். (அல்குர்ஆன் 22:37)

''இறைவன் உங்கள் தோற்றத்தையோ உங்களையோ பார்ப்பதில்லை. மாறாக உங்கள் உள்ளத்தை (இறையச்சத்தை) பார்க்கிறான்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்லிம்)

மேற்கூறிய செய்திகளைப் பார்க்கும் போது எல்லாவற்றுக்கும் ஆணிவேர் இறையச்சம் தான் என்பது புரியும்.

இன்றைக்கு இறையச்சம் என்றால் முஸ்லிம்களுக்கு மத்தியில், மிகப் பெய தாடி இருக்க வேண்டும்; ஜுப்பா அணிந்திருக்க வேண்டும்; தலைப்பாகை அணிந்திருக்க வேண்டும்; உலக ஆசைகள் எதுவுமே இல்லாமல் 24 மணி நேரமும் தொழுகை போன்ற வணக்க வழிபாடுகளில் கழிக்க வேண்டும்; இப்படியெல்லாம் இருந்தால் அவர்கள் தான் இறையச்சத்தால் உயர்ந்தவர்கள்; இல்லையென்றால் அவர்களிடம் இறையச்சம் இல்லை என்ற நிலை உள்ளது.இஸ்லாம் இறையச்சத்திற்கு இப்படிப்பட்ட ஒரு அளவுகோலை கூறவில்லை. மனைவி மக்களை விட்டு விட்டு வனவாசம் செல்வது தான் இறையச்சம் என நினைப்பது இஸ்லாத்திற்கு விரோதமானது என்று இஸ்லாம் கூறுகின்றது.

மூன்று நபர்கள் நபி (ஸல்) அவர்களது மனைவிமார்களின் வீட்டிற்கு வந்து நபி (ஸல்) அவர்களின் வணக்க வழிபாடு பற்றிக் கேட்டனர். அதற்கு நபியின் மனைவியார் நபியுடைய வணக்கத்தைப் பற்றி விவத்தார்கள். அப்பொழுது, ''முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வணக்கம் இப்படி இருந்தால் நாமெல்லாம் எங்கே!'' என்று வந்தவர்கள் வியந்தனர். எனவே அவர்களில் ஒருவர், ''நான் இனி இரவு முழுவதும் தொழுது கொண்டிருப்பேன்'' என்றார். மற்றவர், ''நான் காலமெல்லாம் நோன்பு நோற்பேன். நோன்பை விடவே மாட்டேன்'' என்றார். மூன்றாமவர், ''நான் பெண்களைத் தொட மாட்டேன். திருமணமே செய்ய மாட்டேன்'' என்று கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள் வந்தார்கள். ''இப்படி இப்படியெல்லாம் சொன்னவர்கள் நீங்கள் தாமா?'' என்று வினவினார்கள். ''உங்களை விட அல்லாஹ்வை அதிகம் அஞ்சுபவன் நான் தான். நான் நோன்பு வைக்கிறேன். நோன்பு வைக்காமலும் இருக்கின்றேன். நான் இரவு நேரத்தில் தொழுகின்றேன். உறங்கவும் செய்கின்றேன். நான் பெண்களைத் திருமணம் செய்துள்ளேன். என் இந்த வழிமுறையை யார் புறக்கணிக்கின்றாரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்!'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி)

நம்முடைய பார்வையில் இந்த மூன்று பேரும் தவறான முடிவு எதையும் எடுத்து விடவில்லை. ஏதோ தீமையை செய்யப் போகிறோம் என்று கூறவில்லை. ஆனால் அந்தத் தோழர்களை நபி (ஸல்) அவர்கள் கடிந்து கொண்டார்கள் என்றால் இறையச்சம் என்பதன் அளவுகோலை விளங்கலாம். இறையச்சம் என்பது அதிகமான நன்மை செய்வது அல்ல! 24 மணி நேரமும் வணக்கத்தில் ஈடுபாடு கொள்வது அல்ல! மனைவி மக்களைப் பிரிந்து, துறவறம் மேற்கொள்வது அல்ல! குடும்பத்துடன் இருந்து கொண்டு இறைவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் மனைவி மக்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் செய்வது தான் இறையச்சம் என்பதை இந்தச் செய்தி தெளிவாகத் தெவிக்கின்றது.

ரமளான் மாதம் முழுவதும் முஸ்லிம்கள் நோன்பு நோற்கின்றோம். பகல் முழுவதும் உணவு எதையும் உட்கொள்ளாமல், இல்லறத்தில் ஈடுபடாமல் கழிக்கின்றோம். எல்லாம் எதற்காக? இங்கு தான் இஸ்லாம் மனிதனைப் பக்குவப்படுத்துகின்றது.

நோன்பு நோற்றிருக்கும் போது வீட்டில் உணவு சமைக்கப்பட்டிருக்கும். தனிமையில் இருக்கும் போது அதை உண்டு விட்டால் அது யாருக்கும் தெரியப் போவதில்லை. அவன் நினைத்தால் அந்த உணவைச் சாப்பிடலாம். ஆனால் அவன் சாப்பிடாமல் இருக்கின்றான். ஏன் தெயுமா? அவன் நோன்பு நோற்ற நிலையில் உணவு உட்கொண்டதை மனிதர்களில் யாருமே பார்க்கா விட்டாலும் தன்னைப் படைத்த இறைவன் ஒருவன் பார்த்துக்
கொண்டிருக்கின்றான். அவன் நம்மைத் தண்டிப்பான் என்ற இறையச்சம் தான் அந்த நோன்பாளியை சாப்பிட விடாமல் தடுக்கின்றது.

தனக்குச் சொந்தமான பொருளாக இருந்தாலும் அதை ரமளான் மாதத்தின் பகல் பொழுதில் உண்பதற்கு இறைவன் தடுத்து விட்டான்; அதைச் சாப்பிட்டால் அவன் நம்மைத் தண்டிப்பான் என்ற காரணத்தால் அதைச் சாப்பிடாமல் புறக்கணிக்கின்றான். நோன்பு நேரத்தில் தன்னுடைய பொருளையே இறையச்சத்தின் காரணமாக சாப்பிடாதவன் அடுத்தவர்களுடைய பொருளைச் சாப்பிட முன்வருவானா?

அடுத்தவர் பொருளை அநியாயமாக அபகரிக்க ஒருவன் நினைக்கும் போது, இறைவன் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்ற எண்ணம் அவனுக்கு வந்து விட்டால் அந்த அநியாயத்தை அவன் செய்ய மாட்டான். நோன்பு மட்டுமல்லாது இஸ்லாத்தின் ஒவ்வொரு வணக்கமுமே இறையச்சத்தை வளர்ப்பதற்கு உறுதுணையாக அமைந்துள்ளன.சுருக்கமாகக் கூறினால் இறையச்சம் ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்க வேண்டிய அவசியமான ஒன்று. அது இல்லையெனில் மனிதன் மனிதனாக வாழ முடியாது. மிருகக் குணம் கொண்டவனாக மாறி விடுவான் என்பது மறுக்க முடியாத உண்மை!

எனவே தீய செயல்களைக் களைந்து, நல்ல செயல்கள் புரிவதற்குத் தேவையான இறையச்சத்தை இறைவன் நமக்குத் தருவானாக!
Saturday, August 14, 2010

மரணம் முதல் மறுமை வரை

மரணம்:
உயிர்ப் பெற்ற ஒவ்வொரு ஆன்மாவும் மரணத்தை அடைந்தே தீர வேண்டும் என்பது உலக நியதி. ஒரு மனிதன் ஜனித்த நாள் முதல் ஒரு குறிபிட்ட நாள் வரைதான் அவனால் இப்பூமியில் உயிர் வாழ முடியும், அதன் பிறகு மரணமடைந்தே ஆக வேண்டும். அருள்மறை திருகுர்ஆன் இவ்வாறு கூறுகிறது.

ஒவ்வொர் ஆத்மாவும் மரணத்தைச் சகித்தே ஆகவேண்டும்; அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்கள் (செய்கைக)ளுக்குறிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்; எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்; இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை. (3:185)

மரணம் வரும் வேலையில் நாம் எவ்வளவு பாதுகாப்பாக இருந்தாலும் அல்லது தகர்க்க முடியாத கோட்டையில் இருந்தாலும் சரி, எந்த நேரததில், எந்த இடத்தில், எப்படி மரணம் அடைய வேண்டும் என்று இறைவன் வகுத்து வைத்துள்ளானோ! அதில் சிறிது கூட கூடவோ அல்லது குறையவோச் செய்யாது.இது இறைவனால் ஏற்படுத்தப்பட்டுள்ள ஒன்றே அன்றி வேறில்லை. இதையே நம்மை படைத்த இறைவன் திருமறையில் இவ்வாறு கூறுகிறான்.

"நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்; நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே! (போருக்குச் சென்ற முனாஃபிக்களூக்கு) ஏதேனும் ஒரு நன்மை ஏற்பட்டால் "இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது" என்று கூறுகிறார்கள்; ஆனால், அவர்களுக்கு ஏதாவது தீங்கு ஏற்பட்டாலோ, ";இது உம்மிடமிருந்துதான் ஏற்பட்டது" என்று கூறுகிறார்கள், (நபியே! அவர்களிடம்) கூறும்: "எல்லாம் அல்லாஹ்விடமிருந்தே வந்திருக்கின்றன; இந்த மக்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது? எந்த ஒரு விஷயத்தையும் அவர்களுக்கு விளங்கிக் கொள்ள முடியவில்லையே" (4:78) மேலும்,

இன்னும், ஓர் ஆத்மா மற்றோர் ஆத்மாவிற்கு சிறிதும் பயன்பட முடியாதே (அந்த) ஒரு நாளை நீங்கள் அஞ்சி நடபீர்களாக! (அந்த நாளில்) எந்தப் பரிந்துரையும் அதற்காக ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது; அதற்காக எந்தப் பதிலீடும் பெற்றுக் கொள்ளப்படமாட்டாது; அன்றியும் (பாவம் செய்த) அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள். (2:48)

மக்களிடையே மரணத்தின் பயம் இல்லாமையால் உலகில் சண்டை சச்சரவு, குடும்பத் தகராறு, கொலை, திருட்டு, கற்பழிப்பு போன்ற செய்திகள் தினந்தோறும் செய்தித் தாள்களில் வந்தவண்ணம் உள்ளது, இதில் வருந்ததக்க செய்தி என்னவென்றால் சில நபர்கள் முஸ்லிம் பெயரை வைத்துக்கொண்டு இந்த செயல்களில் ஈடுபடுவதே இதை நிவர்த்திச் செய்ய வழிவகை செய்யவேண்டும், அதற்கு அவர்களுக்கும், அனைத்து உலக மக்களுக்கும் மரணம், மண்ணறை, மறுமை இம்மூன்றையும் தெளிவுப் படுத்துவது இறையச்சமுளள் ஒவ்வொரு முஃமீனகள் மீதும் கடமையாக இருக்கிறது.

நாம் வாழும் இப்பூமியில் புதிது புதிதாக நோய்கள் உருவாகிக்கொண்டிருந்தாலும், நோயைப் படைத்த இறைவனே அதற்கான மருந்தையும் படைத்துள்ளான் என்ற நபிமொழிக்கேற்ப எந்த ஒரு நோயையும் முறியடிக்கும் வகையில் மருந்துகளை மனிதன் இறைவன் வழங்கிய அறிவைக்கொண்டு கண்டுபிடித்துக் கொண்டே இருக்கிறான். எந்த ஒரு மனிதனாலும் மரணத்தை தடுத்து நிறுத்த மருந்து கண்டுப்பிடிக்க முடியாது.

பிறப்பு என்பது எதற்கெல்லாம் உண்டோ அவை இறப்பைத் தழுவியே ஆக வேண்டும். எவரும் அதிலிருந்து தப்ப இயலாது. இறைத்தூதர்களேயானாலும் இறந்துதான் தீரவேண்டும். அல்லாஹ் மரணத்திலிருந்து விதிவிலக்கு தருவதாக இருந்தால் முதலில் அதை பூமான் ந்பி (ஸல்) அவர்களுக்கு தந்திருக்க வேண்டும். ஆனால் இறைமறை அல்குர்ஆன் இவ்வாறு எடுத்துரைக்கிறது.

நிச்சயமாக நீரும் மரணமடைவீர், அவர்களும் ஒருநாள் மரணமடைவார்கள் என்று நபிகளை முன்னிலைப்படுத்தியுள்ள அந்த வார்த்தையாடலிலிருந்தே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கூட அந்த விதிவிலக்கு இல்லை என்றிருக்கும்போது வேறு யாருக்கு அந்த விதிவிலக்கு கிடைக்க முடியும்.

மரணம் எந்நிலையிலும், எப்பொழுது வேண்டுமானாலும், பணக்காரர், ஏழை, உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்றில்லாமல் இறைவன் நாடியவர்களுக்கு அவன் குறிப்பிட்ட நேரத்தில் நம்மை வந்து அடையும், அதற்காக ஒவ்வொரு மனிதனும் தாயாராக இருக்க வேண்டும். மரணம் நம்மை தழுவும் பொழுது அதை சிறிது காலத்துக்கு தள்ளி வைக்க முடியாது அதற்காக இறைவனிடத்தில் எந்த ஒரு முறையீடும் செய்ய இயலாது. வாழ்நாளில் ஒவ்வொருவரும் செய்த நன்மை, தீமையின் அடிப்படையில் அவர் அவருக்கு தண்டனை வழங்கப்படும். இதை அருள்மறை திருகுர்ஆன் தெளிவாக விளக்குகிறது.

உங்களில் ஒருவருக்கு மரணம் வருமுன்னரே, நாம் உங்களுக்கு அளித்த பொருளிலிருந்து, தான தர்மம் செய்துக் கொள்ளுங்கள்; (அவ்வாறு செய்யாதது மரணிக்கும் சமயம்); "என் இறைவனே! என் தவணையை எனக்கு சிறிது பிற்படுத்தக் கூடாதா? அப்படியாயின் நானும் தான தர்மம் செய்து ஸாலிஹான (நல்ல) வர்களில் ஒருவனாக ஆகிவிடுவேனே" என்று கூறுவான். ஆனால், அல்லாஹ, எந்த ஆத்மாவுக்கும் அதன் தவணை வந்துவிட்டால் (அதனைப்) பிற்படுத்த மாட்டான் - நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் தெரிந்தே இருக்கின்றான். (63:10,11)

மண்ணறை:
மனிதன் உலகில் வாழும் காலமெல்லாம் தன்னை மறந்து மண்ணறை வாழ்வை மறந்து, மனைவி, மக்கள், உறவினர்கள், நன்பர்கள் என ஒரு குழுவோடு வாழ்ந்து வருகிறான், அவன் மரணித்தவுடன் அவனை மண்ணறையில் வைக்கும் போது அவனுடன் யாரும் வருவதில்லை, பூமியில் எவ்வளவு சொகுசாக வாழ்ந்தாலும், மண்ணறையில் தனிமையிலும், எந்த ஒரு சொகுசும் இல்லாமல் தான் இருக்கவேண்டும்.

மண்ணறையில் தான் ஒருவன் சொர்க்கவாசியா அல்லது நரகவாசியா என்று தீர்மாணிக்கப்படும். ஒருவன் இறந்து அடக்கம் செய்துவிட்ட பிறகு இரு மலக்குகள் அவனுடைய மண்ணறைக்கு வந்து அவன் இவ்வுலகில் எவ்வாறு நடந்துக்கொண்டான், நன்மை, தீமைகள் செய்ததுப்பற்றி அவனிடம் விசாரிப்பார்கள். விசாரனைக்கு பிறகு அவன் சுவர்க்க வாசியாக இருந்தால், சொர்க்கம் எடுத்துக்காட்டப்படும். நரகவாசியாக இருந்தால் நரக கொடுமைப்பற்றி எடுத்துக்காட்டப்படும். ஆக மறுமை நாள் வரை அவன் மண்ணறையிலேயே தான் குடியிருக்க வேண்டும்.

மண்ணால் படைக்கப்பட்ட மனிதன், மரணம் அவனை அடைந்தவுடன் அவன் மீண்டும் மண்ணுக்கே சொந்தகாரன் ஆகி விடுகிறான். அவன் மறுமை வரை அந்த மண்ணிலேயேதான் குடியிருகக வேண்டும். மாநபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள், ஒவ்வொரு நாளும், நான் பயணிகளின் தங்குமிடம், நான் தனிமையின் இல்லம் எனது இல்லம் மண்ணாலானது, எனது இருப்பிடம் புழுபூச்சிகளின் தங்குமிடம் என மண்ணறை கூவுகிறது. மேலும், மண்ணறை மனிதனது நடத்தையைப் பொறுத்து சுவனப் பூங்காவாக அமையும் அல்லது நரகப்படுகுழியாக அமையும் எனவும் கூறியுள்ளார்கள். இதனால் தான் நரக வேதனைப் பற்றிச் செவியுறும் போது கூட அவ்வளவாக அலட்டிக்கொள்ளாத உதுமான் (ரளி) அவர்கள் மண்ணறைப் பற்றிக் கூறும் போது மட்டும் தாடி நனையுமளவு அழுது கண்ணீர் வடிப்பார்களாம். மண்ணறை மறுமையின் நுழை வாயில், இதில் வெற்றி பெறாதவன் மறுமை வரை சிரமப் ப்டுவான் என அதற்கான காரணத்தையும் விவரிப்பார்களாம்.

மறுமை:
இயல்பாகவே மனிதன் தவறு செய்யக்கூடியவானகவே இருக்கிறான், அதில் இறைவனால் பல தவறுகள் மன்னிக்கப்பட்டு தண்டனையிலிருந்து விலகி விடுகிறான். அதையும் மீறி கொலை, கொள்ளை, கற்பழிப்பு, வீனான பிரச்சனைகளை உண்டு பன்னுதல் போன்ற செயல்களில் வழமையாக ஈடுபட்டுக்கொண்டுள்ளான், அதில் அவன் தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டால், உரிய தண்டனைப் பெறாமலேயே இவ்வுலகில் அவன் தப்பித்துக் கொள்கிறான். அதையும் மீறி அவனுக்கு தண்டனை வழங்கினால் பல தவறுகளுக்கும் சேர்த்து ஒரே தண்டனையிலிருந்து விடுபட்டு விடுகிறான். ஆனால் அது மாதிரி இறந்தப் பின் மறுமையில் அவன் அதை எதிர்பார்க்க முடியாது. ஒருவன் எவ்வளவு தவறுகள் செய்திருக்கிறானோ! அதனடிப்படையில் அவனுக்கு தண்டனை வழங்கப்படுகிறது.

மறுமை நாளில் ஒரு மனிதன் யாரையும் கண்டுக்கொள்ள மாட்டான். தாய், தந்தை,உற்வினர்கள்,நணபர்கள் யாராக இருந்தாலும் அவன் தன்னைப்பற்றியும் மறுமையின் சூழல் பற்றியும் சிந்தித்தவனாகவே இருப்பான் இதையே அருள் மறை திருகுர்ஆன் இவ்வாறு எடுத்துரைக்கின்றது.

அந்த நாளில் மனிதன் விரண்டு ஓடுவான் - தன் சகோதரனை விட்டும், தன் தாயை விட்டும், தன் தந்தையை விட்டும்; தன் மனைவியை விட்டும், தன் மக்களை விட்டும், அன்று ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் (அவல) நிலையே போதுமானதாயிருக்கும். (80:34 - 37)

நாம் இவ்வுலகில் யாருக்கும் கட்டுப்படாமல் அடாவடிதனமாக வாழலாம். யாருக்கு தெரியப்போகுது என்று நம் எண்ணப்படி இஷ்டத்துக்கு கணக்கு வழக்கு இல்லாமல் செயல் பட்டுக்கொண்டிருக்கலாம். ஆனால் அது போல மறுமையில் நடக்க முடியாது, ஏனென்றால் இறைவன் கேட்கக் கூடிய கேள்விகளுக்கு நம்முடைய உறுப்புகள் பதில் சொல்லும், அது நாம் செய்த தவறுகளுக்கு அது சாட்சி சொல்லும் அதிலிருந்து யாரும் தப்ப முடியாது. இதையே திருமறை அழகாக கூறுகின்றது.

அந்த நாளில் நாம் அவர்களின் வாய்களின் மீது முத்திரையிட்டு விடுவோம்; அன்றியும் அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தது பற்றி அவர்களுடைய கைகள் நம்மிடம் பேசும்; அவர்களுடைய கால்களும் சாட்சி சொல்லும்.

ஆகவே மூஃமின்கள் மட்டுமல்லாமல் அனைத்து மக்களும் இறைவழியில் ஈடுபட்டு மறுமையில் ஈடேற்றம் பெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்தவனாக எனது சிறு உரையை முடித்துக்கொள்ளிறேன். இறைவன் ஹிதாயத் தருவானக ஆமீன்!

குறிப்பு: நம்மால் எல்லளவு உதவி செய்யமுடியாவிட்டாலும், உபத்திரம் செய்யாமல் இருப்பதே நண்று,இதுவே இறைவனிடத்தில் நமக்கு ஈடேற்றம் பெற்று தரும்.
Wednesday, August 4, 2010

ஆதம் (அலை) வரலாறு

வரலாறு முன்னுரை:
நபி ஆதம் (அலை) அவர்கள் இறைவனால் படைக்கப்பட்ட ஆதி மனிதர், முதல் நபி, மானிடவர்க்கத்தின் மூலப்பிதா என சிறப்பு பெயர்களால் அழைக்கப்படுகிறார்கள். எல்லாம் வல்ல அல்லாஹ் ஆதம் (அலை) அவர்களை களிமண்ணிலிருந்துப் படைத்தான். அவனின் பிரதிநிதியாக பூலோகத்திற்கு அனுப்பியும் வைத்தான். அல்லாஹ் ஆதம் (அலை) அவர்களுக்கு தன்னால் படைக்கப்பட்ட பொருட்களின் பெயர்களை அவனே கற்றுக்கொடுத்தான். பின் அப்பெயர்களை மலக்குமார்களுக்கு விவரிக்குமாறு பணித்தான். பிறகு தன்னால் படைக்கப்பெற்ற மலக்குமார்கள் போன்றோர்களை நபி ஆதம் (அலை) அவர்களுக்கு சிறம் பணிய அல்லாஹ் கட்டளையிட்டான். இப்லீஸ் தவிர மற்ற ஏனையவர்கள் அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க சிறம் பணிந்தார்கள். இப்லீஸ் நெருப்பால் படைக்கப்பட்ட ஆணவத்தால் களிமண்ணால் படைக்கப்பட்ட மனித வர்க்கத்திற்கு சிறம்பணிய மறுத்ததுடன் கியாமத் நாள் வரை அல்லாஹ்விடத்தில் அவகாசமும் வாங்கி வந்தான். இனி என் வேலை ஆதமுடைய மக்களை நேரான வழியில் செல்வதை தடுத்து அவர்களுக்கு முன்னும், பின்னும், இடமும், வலமும் சென்று அவர்களை நரகத்தின் பக்கம் இழுத்து வருவேன் என கூறினான்.

நபி ஆதம் (அலை) அவர்களிலிருந்தே அவர்களது துணைவியர், (ஹவ்வா (அலை)) அவர்களை எல்லாம் வல்ல அல்லாஹ் படைத்தான். இதையே திருக்குர்ஆன் தெளிவாக எடுத்துரைக்கிறது.

மனிதர்களே! உங்கள் இறைவனுக்கு பயந்துக் கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்: பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும், பெண்களையும் ( வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான். ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்துக் கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள். மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்) - நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான். (4:1)

இப்லீஸ் கூறியவாறே ஆதம் (அலை) அவர்களை வழிக்கெடுக்க நினைத்து, இறைவன் ஆதம் (அலை) அவர்களுக்கு கட்டளையிட்டிருந்தும், இப்லீஸ், நீங்கள் இந்த கனியை உண்டால் நீங்கள் மலக்குகளாக ஆகிவிடுவீர்கள் அல்லது இந்த சுவனபகுதியிலேயே தங்கிவிடுவீர்கள் என இனியப் பேச்சில் மயங்கி இறைவன் தடுத்திருந்த மரத்தின் கனிகளை தின்றதினால் அவர்களுடைய வெட்கஸ்தலங்கள் வெளிப்பட்டன, அவர்கள் அங்கிருக்கும் இலைகளை எடுத்து மறைத்த வன்னம் இருந்தனர், அப்போது இறைவன் என் கட்டளையை மீறிச் சென்றதால் உங்களை இங்கிருந்து பூமிக்கு அனுப்புகிறேன் அங்கு சில காலம் வாழ்ந்து அங்கேயே மரணமடைந்து பிறகு என்னால எழுப்பப்படுவீர்கள் என கூறி அனுப்பினான்.

இவ்வுலகில் மனித வாழ்வின் துவக்கம் - வானவர்களின் உரையாடல்:
(நபியே!) இன்னும் உம் இறைவன் வானவர்களை நோக்கி "நிச்சயமாக நான் பூமியில் ஒரு பிரதினிதியை அமைக்கப் போகிறேன்" என்று கூறியபோது அவர்கள் "(இறைவா!) நீ அதில் குழப்பத்தை உண்டாக்கி, இரத்தம் சிந்துவோரையா அமைக்கப்போகிறாய்? இன்னும் நாங்களோ உன் புகழ் ஓதியவர்களாக உன்னைத் துதித்து, உன் பரிசுத்ததைப் போற்றியவர்களாக இருக்கின்றோம் என்று கூறினார்கள். அதற்கு இறைவன் "நீங்கள் அறியாதவற்றையெல்லாம் நிச்சயமாக நான் அறிவேன்" எனக் கூறினான். (2:30)

இன்னும் (இறைவன்) எல்லாப் (பொருட்களின்) பெயர்களையும் ஆதமுக்கு கற்றுக் கொடுத்தான் பின் அவற்றை வானவர்கள் முன் எடுத்துக்காட்டி, "நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாள்ர்களாயிருப்பின் இவற்றின் பெயர்களை எனக்கு விவரியுங்கள்" என்றான் (2:31)

அவர்கள் "(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவைத் தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன் விவேகமிக்கோன்" எனக் கூறினார்கள். (2:32)

"ஆதமே! அப்பொருட்களின் பெயர்களை அவர்களுக்கு விவரிப்பீராக" என்று (இறைவன்) சொன்னான் அவர் அப்பெயர்களை அவர்களுக்கு விவரித்தபோது "நிச்சயமாக நான் வானங்களிலும், பூமியிலும் மறைந்திருப்பவற்றை அறிவேன் என்றும், நீங்கள் மறைத்துக் கொண்டிருப்பதையும் நான் அறிவேன் என்றும் உங்களிடம் நான் சொல்லவில்லையா! என்று (இறைவன்) கூறினான். (2:33)

மலக்குகள் - மனிதன் - வேறுபாடு:
இறைவன் கட்டளையை சிறிதும் மாற்றமில்லாமல் அப்படியே செய்யக்கூடியவர்க்ள் மலக்குமார்கள், ஆனால் மனிதன் போதிய அறிவு பெற்றமையால் தவறிழைக்கக் கூடியவன். எனவே மலக்குகள் அவ்வாறு கேட்டார்கள். மனிதன் தவறிழைத்தாலும் அத்தவறுக்காக செய்யும் பாவமீட்சியை இறைவன் விரும்புகிறான் என்பதை கீழ்காணும் நபிமொழி தெளிவாக உணர்த்துகிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவனின் கைவசம் என் உயிர் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! நீங்கள் பாவம் செய்யவில்லையாயின், அல்லாஹ் உங்களை போக்கிவிட்டு, பாவம் செய்யும் வேறொரு கூட்டத்தாரைக் கொண்டு வருவான். அவர்கள் அல்லாஹுதஆலாவிடம் பிழைப் பொறுப்பு இறைஞ்சுவார்கள். அவர்களுக்கு அவன் மன்னிப்பளிப்பான். (நூல் - முஸ்லீம் : அபூஹுரைரா (ரலி)).

இறைவன் ஆதமுக்கு கற்றுக்கொடுத்தான்:
இன்னும், (இறைவன்) எல்லாப் பொருட்களின் பெயர்களையும் ஆதமுக்கு கற்றுக் கொடுத்தான் பின் அவற்றை வானவர்கள் முன் எடுத்துக்காட்டி, கற்றுக்கொடுத்தவற்றை விவரிக்க சொன்னான்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹுதஆலா, ஆதம் (அலை) அவர்களைப் படைத்த பொழுது அவர்களுக்குக் கூறினான்: (ஆதமே!) நீர் சென்று, அங்கு அமர்ந்திருக்கும் மலக்குகளின் கூட்டத்தினருக்கு ஸலாம் கூறுவிராக! (அதற்குப் பதிலாக) அவர்கள் உமக்கு வழங்கும் காணிக்கையை செவிமடுப்பீராக! நிச்சயமாக அது உமக்கும், உம் சந்ததியினருக்கும் உரிய காணிக்கையாகும். அதன்படி ஆதம் (அலை), (அம்மலக்குகளின் கூட்டத்தினரிடம் சென்று) "அஸ்ஸலாமு அலைக்கும்", உங்களின் மீது அல்லாஹ்வின் சாந்தி உண்டவதாக என்று கூறினார்கள். அதற்கு அம்மலக்குகள், "அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி" உங்களின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் அவனின் கருணையும் உண்டாவதாக என்று கூறினார்கள், "வரஹ்மத்துல்லாஹி" என்ற சொல்லை ஸலாமின் மறுமொழியில் அவர்கள் அதிக்ப்படுத்தினார்கள். (நூல் - புகாரி, முஸ்லீம் : அபூஹுரைரா (ரலி))

ஆதம் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் கற்றுதந்த பாவமீட்சிக்கான பிரார்த்தனை:
அதற்கு அவர்கள் "எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் - நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிட்டால், நிச்சயமாக நங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்". என்று கூறினார்கள். (7:23)

ஆதம் (அலை) அவர்களும் அவர்களுடைய துணைவியாரும் பூமிக்கு இறக்கப்படுதல்:
(அதற்கு) இறைவன், "இதிலிருந்து நீங்கள் இறங்குங்கள் - உங்களில் ஒருவர் மற்றவருக்குப் பகைவராயிருப்பீர்கள் உங்களுக்கு பூமியில் தங்குமிடம் இருக்கிறது அதில் ஒரு (குறிப்பிட்ட) காலம் வரை நீங்கள் சுகம் அனுபவித்தலும் உண்டு" (7:24)

"அங்கேயே நீங்கள் வாழ்ந்திருப்பீர்கள் அங்கேயே நீங்கள் மரணமடைவீர்கள் (இறுதியாக) நீங்கள் அங்கிருந்தே எழுப்பப்படுவீர்கள்". (7:25)

ஒரே வழித்தோன்றல்:
மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்துக் கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவர்களிலிருந்தே அவர்களுடைய மனைவியையும் படைத்தான். பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும், பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான் ஆகவே அல்லாஹுக்கே பயந்துக் கொள்ளுங்கள். அவனைக் கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள். மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்) - நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கிறான். (4:1)

களிமண்ணால் படைத்தான்:
இறைவன் தனது திருமறையில் முதல் மனித படைப்பினமான ஆதம் (அலை) அவர்களை படைத்ததுப் பற்றி தெளிவாக கூறுகிறான்.
ஓசை தரக்கூடிய கருப்பான களி மண்ணால் மனிதனை நிச்சயமாக நாமே படைத்தோம். (15:26)
(அதற்கு) முன்னர் ஜின்னை (ஜிங்களின் மூல பிதாவை) கடிய சூடுள்ள நெருப்பிலிருந்து நாம் படைத்தோம். (15:28)

மலக்குகள் நூர் எனும் ஒளியால் படைக்கப்பட்டார்கள். ஜின்கள் நெருப்பின் ஜுவாலையால் படைக்கப்பட்டார்கள். ஆதம் (அலை) உங்களுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ள பொருளால் (மண்ணால்) படைக்கப்பட்டார்கள். (முஸ்லீம்: ஆயிஷா (ரலி))

அல்லாஹ் ஆதமை பூமி முழுவதும் திரட்டப்பட்ட மண்ணின் ஒரு கை அளவிலிருந்து படைத்தான். எனவே ஆதமின் மக்கள் பூமியின் நிறம் மற்றும் தன்மைக்கு ஏற்றவாறு அமைகின்றனர். அவர்களில் சிலர் வெள்ளையாகவும், சிலர் சிவப்பாகவும், சிலர் கறுப்பாகவும், சிலர் இரண்டும் கலந்துமுள்ளனர். அவர்களில் சிலர் கெட்ட குணமுடையோராகவும், சிலர் மென்மையான குணமுடையோராகவும், சிலர் கடின சித்தமுடையோராகவும், சிலர் நடுநிலையிலும் உள்ளனர். (அஹ்மத் : ஆபூமூஸா (ரலி))

ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்ட நாள்:
சூரியன் உதயமாகும் நாட்களில் மிகச் சிறந்தது, ஜும்ஆ நாளாகும். அன்று தான் ஆதம் (அலை) படைக்கப்பட்டார்கள். அன்று தான் அவர்கள் சுவர்க்கத்தில் நுழைந்தார்கள், அன்றுதான் அவர்கள் செர்க்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். (முஸ்லிம் : அபூஹுரைரா (ரலி))

ஆதமுடைய மக்கள் அனைவரும் பாவம் செய்யக்கூடியவர்களே, அப்பாவத்தை உணர்ந்து இறைவனிடத்தில் தவ்பா (பாவ மன்னிப்பு) செய்தால் இறைவன் தன் பாவங்களை மன்னித்து நல்வாழ்வினைத் தருவான். நாம் அனைவரும் ஷைத்தானுடைய வலையில் விழுந்துவிடாமல் இறைவன் கட்டளைப்படி, எம்பெருமானார் (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த வழியில் சென்று ஈருலக நல்வாழ்வினைப் பெற்று, நல்லடியானாக மர்ணிப்பதற்கு கருணை உள்ள ரஹ்மான் கிருபை செய்வானாக ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!

சகோதரனைப் பற்றி

ஊக்கமளிப்பவர்கள்